<p>திண்டுக்கல்: நத்தம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கருப்பு சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று சமைத்து சாப்பிடும் வினோத திருவிழா கொண்டாடப்பட்டது. </p><p>திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டுப்பட்டியில் உள்ள கரந்தமலை கருப்பு சுவாமி கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது. </p><p>மலை அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோயிலில், பிறந்த குழந்தை உட்பட பெண்கள் வரை பங்கேற்க அனுமதி இல்லை. இந்த ஆண்டு, இவ்விழா ஆடி அமாவாசை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்ட பின் இளைஞர்கள் ஒன்றிணைந்து உரித்து, சுத்தம் செய்து, சமைத்தனர். </p><p>சமையல் முடிந்த பின்னர், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருப்பசாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதம் பிரசாதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்டது. </p><p>மேலும் அதிகாலை வரை சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு உருண்டை சாதத்துடன் ஆட்டுக்கறி குழம்பு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற இந்தத் திருவிழாவில் குட்டுப்பட்டி, ஒத்தினிப்பட்டி, பஞ்சயம்பட்டி, பாலப்பட்டி, புதுப்பட்டி, மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இந்த விழா, பாரம்பரியத்தையும் சமூக ஒற்றுமையையும் பறைசாற்றுவதாக அமைந்தது. </p>