<p>விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், இளம்பெண்ணின் கையிலிருந்த ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டரை வயது மற்றும் 1 வயது கைக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இவர்கள் அனைவரும் பேருந்தில் முன்பக்க படிக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தனர். </p><p>மீனாட்சிபுரம் விளக்கு அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது சட்டென பேருந்து நின்றதால் மதன்குமார், கையில் இருந்த 2 1/2 வயது குழந்தையுடன் கீழே விழுந்த நிலையில், அவரது சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை முன்பக்கப்படி வழியாக சாலையில் விழுந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் மதன்குமார் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், இரு குழந்தைகளும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.</p>