<p>திருவாரூர்: திடீரென கடை வாசலில் எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்து சாம்பல் ஆன சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. </p><p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சாந்தி தியேட்டர் எதிர்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடை வாசலில் நின்றிருந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அனைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். </p><p>இருப்பினும், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பல் கூடாக மாறியது. இந்த விபத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. சமீப காலமாக எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்து வரும் சம்பவம் அனைவரும் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது மன்னார்குடியில் பைக்கை ஆன் செய்த பொழுது தீப்பிடித்து எரிந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>