<p>திண்டுக்கல்: நத்தம் அருகே பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.</p><p>திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர் சங்கர் கோயில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டை சோறு கறி விருந்து திருவிழா இங்கு பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். </p><p>இந்த விழா இந்த ஆண்டும் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் 5,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவில் தொடங்கிய இந்தத் திருவிழாவில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் சாமிக்கு பலியிடப்பட்டன. </p><p>பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து சமைத்தனர். சமையல் முடிந்த பிறகு, பூஜைகள் நடத்தப்பட்டு பொன்னர் சங்கர் சுவாமிக்கு உருண்டை சாதம் படைக்கப்பட்டது.</p><p>பாத சிறுகுடி, குமரபட்டி, புதூர், நத்தம், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள் இவ்விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பாரம்பரிய விழா, கிராம மக்களிடையே ஒற்றுமையையும் பக்தியையும் வெளிப்படுத்துவதாக அந்த அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.</p>