<p>கோயம்புத்தூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு,கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லையில் நடப்பது போல் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுது.</p><p>நாட்டின் 79 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதையொட்டி, தமிழகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனிடையே சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.</p><p>அதேபோல் கோவை வ.உ.சி மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். </p><p>அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி நிறத்திலான மூவர்ண பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. மேலும் அமைதியின் சின்னமாக வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறை, மருத்துவ துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.</p><p>இதனை அடுத்து, வாகா எல்லையில் நடத்தப்படுவது போன்ற சிறப்பு அணி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தேசப்பற்று நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. கோவை வ. உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை பொதுமக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் என பலரும் கண்டுகளித்தனர். முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடைபெறுவதை போன்ற அணி வகுப்பை கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் நிகழ்த்தி காட்டினர். இதனை ஏராளமானோர் ஆச்சர்யத்துடன் கண்டு களித்தனர்.</p>