<p>நீலகிரி: குன்னூர் அருகே பூட்டப்பட்டிருந்த மளிகை கடையை உடைத்து அங்கிருந்த சாக்லேட்டுகளை கரடி ஒன்று சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>நீலகிரி மாவட்டம் வனப்பகுதி நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் இருக்கும் வனவிலங்குகள் உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் வனவிலங்கள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. சமீக காலமாக இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.</p><p>இந்த நிலையில், வெலிங்டன் கேட்டில் பவுண்டு சாலை ஓரத்தில் உள்ள கணேசன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த கரடி, பூட்டை தனது பலத்தால் உடைத்தது. பின்னர், அங்கிருந்த சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு, தேவையானவற்றை எடுத்துச் சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p>இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கரடி நடமாட்டம் உறுதி செய்தால், கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குன்னூர் வனச்சரகர் தெரிவித்துள்ளார்.</p>
