<p>தஞ்சாவூர்: உலக பிரசித்தி பெற்ற தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை தோற்றுவித்த மாமன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜியும் ஒருவர். இவர், ஆட்சி செய்த 1797 முதல் 1832 வரையிலான காலகட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூலகத்தை தோற்றுவித்தார். இந்த நிலையில், இவரது 248-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.</p><p>இதில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தஞ்சை அரண்மனை வளாகம் சங்கீத மஹாலில் உள்ள சரபோஜியின் முழு உருவ பளிங்கு சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், சங்கீத மஹால் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நூல் வெளியீட்டு விழா மற்றும் பல்வேறு போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.</p>