<p>தேனி: நேற்று இரவு பெய்த கனமழையால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் பெரியகுளம் கும்பக்கரை அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளது.</p><p>தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்து சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலான மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்வதால் தொடர்ந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர் .</p><p>இதே போல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழையால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நான்காவது நாளாக வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.</p>
