<p>தூத்துக்குடி: துபாயிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.3.75 கோடி மதிப்பிலான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>துபாய் ஜெபல் அலி துறை முகத்திலிருந்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது. கப்பலில் இருந்த ஒரு கன்டெய்னரில் பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் முகவரியில், `வெட்டேட்ஸ்' எனப்படும் ஈரப்பதமான பேரீச்சம்பழங்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது மத்திய புலனாய்வு வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் குறித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவை போலி என்று தெரியவந்தது.</p><p>இதனையடுத்து அந்த கன்டெய்னரை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் பாதி அளவுக்கு பேரீச்சம்பழம் பாக்கெட் பண்டல்கள் இருந்தன. அதற்கு, பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 1,300 பெட்டிகளில் இருந்த 20 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.75 கோடியாகும். மேலும் ரூ.55 லட்சம் மதிப்பிலான பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.</p>