<p>கோயம்புத்தூர்: சாலக்குடி செல்லும் சாலையில் ’கபாலி’ என்ற காட்டு யானை சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. </p><p>வால்பாறை அருகே உள்ள சாலக்குடி செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களாக ’கபாலி’ என்ற ஒற்றை தந்த காட்டு யானை அரசு பேருந்தை மறித்தும், சுற்றுலா செல்லும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகிறது. வனப்பகுதியில் இருக்கும் மரத்தை இழுத்து போட்டு சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்லாமல் தடுத்தும் வருகிறது. </p><p>இந்நிலையில் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகளை வனப்பகுதியில் ஒளிந்திருந்து ’கபாலி’ திடீரென ஆக்ரோஷத்துடன் துரத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் விஜயன் கூறுகையில், ”இந்த காட்டு யானை கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் முகாமிட்டு சுற்றுலா செல்லும் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. பகல் நேரங்களில் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உள்ளது. இந்த காட்டு யானையை பிடித்து வனத்துறையினர் வேறு வனப்பகுதியில் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்” என கூறினார்.</p>
