<p>நீலகிரி: காலாட்படை தினத்தை முன்னிட்டு குன்னூரில் நடந்த மராத்தான் போட்டியில் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.</p><p>நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் சார்பில் இன்று ‘காலாட்படை தினம்’ கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக செளரியவீர் என்ற ‘மாரத்தான் போட்டி’ நடத்தப்பட்டது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ராணுவ வீரர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு 5 கி.மீ தூரமும், ராணுவ வீரர்களுக்கு 10 கி.மீ தூரமும் என 2 பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தானை வெலிங்டன் ராணுவ அதிகாரி கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.</p><p>இதுகுறித்து போட்டியில் கலந்து கொண்ட மாணவர் கூறுகையில், “வெலிங்டன் ராணுவ மையத்தில் ’Infantry Day’ மராத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டோம். எங்களை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் உற்சாகப்படுத்தினர். மேலும், நமது வாழ்நாளில் நடைபயிற்சியை நாள்தோறும் மேற்கொள்ள வேண்டும். அதனால், நமது உடல்நலம் ஆரோக்கியம் பெறும்” எனத் தெரிவித்தார்.</p>
