<p>காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் மளிகை கடையில் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மளிகைக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் உரிமையாளர் பாலமுருகன், வழக்கம் போல் நேற்று இரவு 11 மணியளவில் அன்றைய தின வருமானத்தை கல்லாப்பெட்டியில் வைத்து விட்டு, கடையை அடைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து வழக்கம் போல் இன்று காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. </p><p>உடனடியாக கடை உரிமையாளர் பாலமுருகன் உடனடியாக காஞ்சிபுரம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், நான்கு நபர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. </p><p>இவர்களில் இரண்டு பேர் கடைக்கு வெளியே காவல் காத்திருக்க, மற்ற இரண்டு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
