<p>கோயம்புத்தூர்: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேருக்கு நவ.19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.2) இரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பருடன் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, அந்த கல்லூரி மாணவியை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><p>இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரை திங்கட்கிழமை (நவ.3) இரவு காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். </p><p>முன்னதாக, இதுகுறித்து கோவை வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி JM2 அப்துல் ரகுமான் நேற்று (நவ.5) இரவு எட்டு மணியளவில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையானது சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் வருகிற 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். </p>
