<p>தஞ்சாவூர்: ’டிட்வா’ புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் <br>மாவட்டம் முழுவதும் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. </p><p>தஞ்சாவூர் மாவட்டம் வடக்குப்பட்டு, கக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் தாளடி இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை வயல்கள் தண்ணீரால் சூழ்ந்து பயிர்கள் தெரியாதவாறு ஏரி போல் காட்சி அளிக்கின்றன. </p><p>மேலும் வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களுக்கு இடையில் சாலை போடப்பட்டுள்ளதால் தண்ணீர் வடிகால் வாய்க்காலில் செல்லாமல் வயல்களுக்குள் தேங்கி நிற்கிறது. இதற்கு அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததே பயிர் சேதத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். </p><p>ஏற்கனவே மழையால் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மறுபடியும் நெற்பயிர்கள் முழ்கியுள்ளதால் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p>
