<p>திண்டுக்கல்: தமிழக மலைப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாகப் பதிவாகி வருவதால், இந்த ஆண்டு கொடைக்கானலிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.</p><p>திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல், இயற்கை அழகுக்கும் குளுமையான காலநிலைக்கும் பெயர் பெற்றது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு கடும் குளிர், உறைபனி, பனிமூட்டம் போன்றவைக்கு வழக்கமானவை. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழக மலைப்பகுதிகளில் வெப்பநிலை குறைவாகப் பதிவாகி வருவதால், கொடைக்கானலிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.</p><p>கடந்த வாரம் உறைபனி ஏற்பட்ட நிலையில், இரு நாட்களாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய குளிர் வாட்டி வதைத்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் காலை நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்த்தனர். ஆனால், இன்று (டிச19) அதிகாலையில் ஏற்பட்ட சூரிய உதயம் இயற்கையின் அற்புதமான காட்சியை வழங்கியது.</p><p>கொடைக்கானல் நகர் முனை பகுதியிலிருந்து பார்க்கும் போது, பெரியகுளம், தேனி, வைகை அணை உள்ளிட்ட தாழ்வாரப் பகுதிகள் பனிமூட்டத்தால் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தன. சூரியன் உதயமாகத் தொடங்கியதும், மெல்ல மெல்ல பனிமூட்டம் கலைந்து, தரைத்தளப் பகுதிகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. இந்தக் காட்சி பார்ப்போரை மெய்மறக்க வைத்தது.</p><p>பனிமூட்டத்துடன் கலந்த சூரிய உதயம், கொடைக்கானலின் இயற்கை அழகை மேலும் பிரகாசப்படுத்தியது.இத்தகைய காட்சிகளால் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையிலேயே பார்வைப் புள்ளிகளில் குவிந்தனர். புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். </p>
