<p>ஈரோடு: ஊருக்குள் புகுந்த காட்டுயானை கூட்டத்தை கடும் குளிரிலும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வனத்துறையினர் விரட்டிய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது. </p><p>ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அருளவாடி கிராமத்தில் காலை நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கமாக உள்ளது. மேலும், இந்த யானை கூட்டங்கள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் இடம்பெயர்ந்த காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருவதால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில், நேற்றிரவு காட்டு யானை ஒன்று சோளகர் தொட்டி பகுதியில் புகுந்து, அவ்வழியாக நடந்து சென்ற முதியவரை தாக்கியது. இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருடன் இணைந்து யானையை விரட்டும் பணியை கடும் குளிரிலும் மேற்கொண்டனர். ஹாரன் அடித்து சத்தம் எழுப்பியும், டிராக்டர் மூலம் விரட்டியும் காட்டு யானையை கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் விரட்டினர். </p>
