<p>ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபட்டது.</p><p>தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது பவானிசாகர் அணை. இது 105 உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நீர் திறக்க உத்தரவிட்டது. </p><p>அதன்படி இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டனர். இன்று ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் 67 நாட்கள் தண்ணீர் திறப்பு மற்றும் 44 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என முறை வைத்து விட்டு விட்டு தண்ணீர் திறந்து விடப்படும். இன்று திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். </p>
