<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தின் வெளிப்புறத்தில் 'தமிழ்நாடா' 'பீகாரா' என மர்ம நபர்கள் எழுதி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொது போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.</p><p>இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்தில் இருந்து இன்று காலை பொள்ளாச்சி மார்க்கமாக அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது தேவாரம், தேனி, பழனி, பொள்ளாச்சி மார்க்கமாக கோவை செல்லும் அந்த குறிப்பிட்ட பேருந்தில், 'அரசு போக்குவரத்து கழகம் - மதுரை' என எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் 'தமிழ்நாடா' 'பீகாரா' என மர்ம நபர்கள் சிலர் சிகப்பு மையால் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
