<p>ஈரோடு: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு கொம்புகளை அழகாக சீவி வர்ணம் பூசும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.</p><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணி, அலங்கார கயிறு கட்டி, மாலை அணிவித்து அலங்காரத்துடன் பொங்கல் படையலிடுவது வழக்கம். </p><p>அதன் படி மாடுகளை அழகுபடுத்துவதற்காக கொம்பு சீவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்ட ஏதுவாக விவசாயிகள் தங்களது மாடுகளை கொம்பு சீவும் தொழிலாளர்களிடம் அழைத்துச் சென்றனர். </p><p>சிறிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.100-ம், பெரிய கொம்புகள் உள்ள மாடுகளுக்கு ரூ.250-ம் கொம்பு சீவுவதற்கான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தெய்வமாக வணங்கும் மாடுகளுக்கு மாட்டு பொங்கல் பண்டிகை அன்று கறவை, காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து அலங்காரத்துடன் பூஜை செய்து பொங்கல் படையல் இட்டு மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.</p>
