<p>வேலூர்: மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.</p><p>வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீஜலகண்டீஸ்வரர் திருக்கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நந்திபகவானுக்கு தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை உள்ளிட்ட பலவகை பழங்களாலும், அதிரசம், முறுக்கு, சுழியம், உருண்டை போன்ற பட்சனங்களாலும் அழகிய மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.</p><p>பின்னர், சிவபெருமான், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனர் ஆகியோர் ஆலயத்தின் உள்பிரகாரத்திலிருந்து கோபுரத்தின் வெளிப்புறத்திற்கு எழுந்தருள செய்து, பாரம்பரியமாக நடைபெறும் திருவூடல் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டது. மகா தீபாராதனைகளுக்குப் பின்னர் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.</p>
