<p>திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் அமைந்துள்ளது சிறுமலை வனப்பகுதி. இந்த சிறுமலை திண்டுக்கல்லிற்கு மிக அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். இங்கு பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. </p><p>பின்னர் கிடப்பில் போடப்பட்ட பல்லுயிர் பூங்காவை ரூ. 6.2 கோடி நிதி ஒதுக்கி பணிகளை மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். </p><p>பின்னர், மாவட்ட வன அலுவலர் சதீஷ்ஷிடம் பல்லுயிர் பூங்காவின் கட்டமைப்புகள் குறித்தும், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். </p><p>தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது முக்கியமாக, 125 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பல்லுயிர் பூங்காவில் இரண்டு கண்காணிப்பு கோபுரம், இரண்டு சிறுவர் பூங்காக்கள், பட்டாம்பூச்சி விளக்க பகுதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாகக் கூறினார். இந்த பணிகள் 2 வாரங்களில் முடியும் என்றும் இது சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபத்தை கொடுக்கும் என்றும் ஆட்சியர் சரவணன் தெரிவித்தார். </p>
