<p>திருவள்ளூர்: போதையில் இரட்டைக் கொலை அரங்கேறிய ஒண்டிக்குப்பம் பகுதியில் வளர்ந்திருந்த கஞ்சா செடியை போலீசார் பறித்துச் சென்றதோடு, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். </p><p>திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாகவும், இதனை காவல்துறை கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை 4 சிறுவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை கடப்பதற்குள், கடந்த 17 ஆம் தேதி கஞ்சா போதையில் வந்த நபர்களால் 2 பேர் கற்களாலே அடித்து கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலையில், ஒண்டிக்குப்பத்தில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் திருவள்ளூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்த போலீசார், சாலையோரத்தில் ஒரு அடி உயரம் வளர்ந்திருந்த கஞ்சா செடியை அங்கிருந்து பிடுங்கிச் சென்றனர்.</p><p>தொடர்ந்து, கஞ்சா செடியை வேறு யாரேனும் வளர்த்து வருகிறார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். </p>
