<p>உதகை: மாயார் பகுதியில் புலி ஒன்று சாலையை கடந்து சென்ற காட்சி வைரலாகி வருகிறது</p><p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார், சிங்காரா, மசினகுடி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் புலிகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்து வருகிறது.</p><p>மேலும் இந்த பகுதியில், புள்ளிமான்கள், மயில்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்டவையும் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் இன்று கம்பீரமாக புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. </p><p>இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.</p><p>முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி சாலைகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், வன விலங்குகளை எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மயில்கள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே சென்று செல்ஃபி எடுப்பது போன்ற விஷம செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
