<p>வேலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், சுவை மற்றும் விநியோக முறைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். </p><p>வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், “உங்கள் ஊரில் உங்களை தேடி” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பல்வேறு அரசு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று காலை குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், சுவை மற்றும் விநியோக முறைகள் குறித்து நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவையும் சாப்பிட்டார்.</p><p>மேலும், காலை உணவு திட்டத்தின் பயன் குறித்து மாணவிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பாடல் பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவிகளின் பாடலை கேட்ட மாவட்ட ஆட்சியர், அவர்களை பாராட்டியதுடன், அரசு திட்டங்கள் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நல மேம்பாட்டிற்கு தொடர்ந்து பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார். </p>
