<p>தேனி: தை மாதம் முடிவதற்குள் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பதில் கிடைக்கும் என ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பரபரப்பான அரசியல் சூழலில் தங்களது அடுத்த கட்ட நகர்வு குறித்து அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் உங்களது அடுத்த கட்ட நகர்வு என்ன என கேட்ட போது, ”இன்னும் இரண்டு நாட்களில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். அதற்கு பின் தை மாதம் முடிவதற்குள் உங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்” என்றார். </p><p>பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து யாராவது உங்களிடம் பேசியுள்ளார்களா என்ற கேள்விக்கு, ”இரண்டு நாட்கள் பொறுங்கள்” என ஓபிஎஸ் பதில் அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். அதற்கு முன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், சுப்புரத்தினம் ஆகியோரும் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.</p>
