<p>திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. </p><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்.</p><p>பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். </p><p>இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். </p>
