<p>செங்கல்பட்டு: திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீகந்தசாமி திருக்கோயில் உள்ளது. திருப்போரூர் முருகன் என அழைக்கப்படும் கந்தசாமி பெருமான் ஞானக்கடவுளாக முத்தமிழ் வேந்தனாக பக்தர்களை காத்து அருள்புரிந்து வருகின்றார்.</p><p>இங்கு தை கிருத்திகை தினமான இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முதலாவதாக சரவண பொய்கை குளத்தில் நீராடியதை தொடர்ந்து ஸ்ரீ கந்தசாமி பெருமானை தரிசனம் செய்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் வழங்கப்படும் அருட்பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினார். சுவாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தை கிருத்திகை தினமான இன்று பக்தர்கள் காவடி எடுத்தும் நெய் தீபம் ஏற்றியும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p>
