<p>சென்னை: கல்லூரி மாணவர்கள் இந்தியில் வரவேற்றதால் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் நாசர் அதிருப்தி அடைந்ததாக தெரிவித்தார்.</p><p>சென்னையை அடுத்த ஆவடியில் 'நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், தண்டூரை பகுதி அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு விடுதிக்கான கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சிஎஸ்ஆர் நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளி புதிய ஆய்வகம் மற்றும் சமையல் கூடத்தை அவர் திறந்து வைத்தார்.</p><p>அத்துடன் முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற "உலகம் உங்கள் கையில்" நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். </p><p>பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், "இங்கே வந்தவுடன் எனது மண்டையில் சுர்ரென்று ஏறிவிட்டது. காரணம் என்னை என்.என்.சி மாணவர்கள் வரவேற்று அழைத்து வந்தனர். ஆனால் அவர்கள் பேசியது எதுவும் எனக்கு புரியவில்லை. அவர்கள் எனக்கு சல்யூட் அடித்து வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தினாலும் எதுவும் புரியவில்லை. காரணம் அவர்கள் முழுவதும் இந்தியில் தான் வரவேற்றார்கள். </p><p>அந்த வரவேற்பு முறையை மாற்ற வேண்டும். தெலுங்கு, இந்தி, ஒடிசா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு எல்லாம் 52, 56 எழுத்துகள் தான் இருக்கின்றன. உலக பொதுமொழியான ஆங்கிலத்திற்கே 26 எழுத்துகள் தான். ஆனால் தமிழுக்கு மட்டும் தான் 247 எழுத்துகள் இருக்கின்றன. அந்த திமிரோடு நாம் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.</p>
