<p>அரியலூர்: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.</p><p>அரியலூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், சாலையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.</p><p>இந்த சாலை பாதுகாப்பு வார பேரணியில், பள்ளி மாணவ மாணவிகள், தலைக்கவசம் அணிவது அவசியம், செல்போன் பேசி கொண்டு வாகனங்கள் ஓட்டக் கூடாது, 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற பதாகைகளை ஏந்தி வந்தனர்.</p><p>மேலும், அரசு சட்டங்களுக்கு உட்பட்டு அனைவரும் வாகனங்களை இயக்க வேண்டும், பொதுமக்கள் சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தி பேரணியாக கோஷமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.</p>
