<p>மதுரை: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 78-வது வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது அஸ்தி பீடத்தின் முன்பாக காந்தியவாதிகள் ராட்டையில் நூல் நூற்று அஞ்சலி செலுத்தினர்.</p><p>தேசத்தந்தை மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் புதுடெல்லி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தேசப்பிதா மறைந்த நாளில் நாடு முழுவதும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்நிலையில் மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள காந்தியின் அஸ்தி பீடத்தில் இன்று பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>மேலும், அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக காந்தி நினைவு அருங்காட்சியக ஊழியர்கள் அஸ்தி பீடத்தின் முன்பாக அமர்ந்து ராட்டையில் நூல் நூற்று மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர். </p>
