<p>தூத்துக்குடி: கிறிஸ்தவ தேவாலய பிரதிஷ்டை விழாவில் சமையல்காரர்கள் இல்லாமல் ஊர் மக்கள் ஒன்று கூடி சமைத்து பிரமாண்ட விருந்து வைத்தனர்.</p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெய்யானபுரத்தில் உள்ள பரிசுத்த பவுலின் ஆலயத்தில் 179 ஆவது ஆலய பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அந்த பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டது. 9 டன் அரிசி, 7 டன் பருப்பு, 5 டன் காய்கறி கொண்டு பிரம்மாண்டமாக 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சப்பா அரிசி சாப்பாடு சமைக்கப்பட்டது.</p><p>இந்த சமையல் அனைத்தும் எந்தவித பணியாளர்களும் இல்லாமல் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து சமைத்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் இன்றி அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்து ஊர் கூடி விருந்து வைத்து உணவு சமைத்தனர்.</p><p>மேலும் இந்த விழாவிற்காக சமைக்கப்பட்ட சாம்பார் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு 100 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட குழாய் அமைக்கப்பட்டிருந்தது. இத்தகைய வியப்பான பிரம்மாண்ட விருந்தில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் மதம் பார்க்காமல் வந்து விருந்து உண்டும், வீடுகளுக்கு வாங்கியும் சென்றனர்.</p>
