<p>திண்டுக்கல்: பழனியில் முருக பக்தர்களுக்காக இஸ்லாமியர்கள் 4-வது ஆண்டாக முகாம் அமைத்து மருத்துவ சேவை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>பழனி தைப் பூச திருவிழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. தைப் பூசத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நாளையும், ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் நடைபெறவுள்ளன.</p><p>தைப் பூச திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பழனியை அடுத்த ஆயக்குடி அருகே பாத யாத்திரை வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.</p><p>காயிதே மில்லத் அறக்கட்டளை நிறுவனர் அஜ்மத் அலி மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் 4 ஆம் ஆண்டாக முருக பக்தர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் கால் வலியை போக்கக் கூடிய மருந்துகள் மற்றும் முதலுதவி சிகிச்சை இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன. பாத யாத்திரையாக வரும் முருக பக்தர்களின் கால்களில் இஸ்லாமியர்கள் மருந்துகளை தடவி சேவை செய்து வருவது மதநல்லிணக்கத்தை காட்டுகிறது. </p>
