<p>மயிலாடுதுறை: பள்ளி மாணவர்கள் எந்த நேரமும் நல்ல எண்ணத்துடன் இருந்து எப்பொழுதும் சிரிப்பை தக்க வைத்துக்கொள்ள முயல வேண்டும் என்று நடிகை தேவயானி அறிவுரை வழங்கினார்.</p><p>மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆக்கூர் தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை தேவயானி கலந்துகொண்டார். விழாவிற்கு வந்த நடிகை தேவயானிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகை தேவயானியை பார்த்த சிறுவர்கள், குழந்தைகள் முதல் பெற்றோர்கள் வரை ஆர்வத்துடன் கை அசைத்து கரகோஷம் எழுப்பினர். </p><p>அப்போது மேடையில் நின்று நடிகை தேவயானி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பள்ளி விழாவை தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்த பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியை நடிகை தேவயானி ஆர்வமுடன் இறுதி வரை கண்டு ரசித்தார். </p><p>இதில் சூர்யவம்சம் படத்தில் தேவயானி ஆடிய " நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது" என்ற பாடலுக்கு மாணவர்கள் நடத்திய நடன நிகழ்வை சிரித்த முகத்துடன் கண்டு கைத்தட்டி ரசித்தார். இதன் பின்னர் நடனமாடிய மாணவர்களின் அழைப்பை ஏற்று மேடையேறி சென்று பூங்கொத்து கொடுத்து மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p><p>அப்போது நடிகை தேவயானி, ''எந்த நேரமும் நல்ல எண்ணத்துடன் இருந்து எப்பொழுதும் சிரிப்பை தக்க வைத்துக்கொள்ள முயல வேண்டும்'' என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.</p>
