<p>திருவாரூர்: பெட்ரோல் பங்கில் இளைஞர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:50 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்கள் ஏற்கனவே போதையில் இருந்தனர். இதனிடையே தாங்கள் கொண்டு வந்த கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறிய அங்கு இருந்த ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.</p><p>மேலும், பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா, தீயணைக்கும் கருவி, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி பெட்ரோல் பங்க்கை சூறையாடினர். இதனை தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.</p><p>காயம் அடைந்த ஊழியர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.</p>
