<p>சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். </p><p>தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். வடபழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. </p><p>இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன் பின்னர் அதிகாலையில் மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். </p><p>ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு போதுமான அளவிற்கு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு, குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் பக்தர்களுக்காக நீர்மோர் அன்னதானமும் வழங்கப்பட்டது.</p>
