<p>தருமபுரி: குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் தேர் திருவிழாவில் பெண்களே வடம் பிடித்து இழுத்து சென்றனர்.</p><p>தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா இன்று (பிப்ரவரி 3) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) அன்று தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாணமும் நேற்று விநாயகா் தேரும் கோலாகலமாக நடைபெற்றன.</p><p>தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா ரதம் நிலைப்பெயர்த்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. கோயில் உள்ள மிகப்பெரிய தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேரை பெண் பக்தர்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து முருகனுக்கு அரோகரா கோசமிட்டு பக்தி பரவசமடைந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாரிமுனை நண்பர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.</p>
