<p>நீலகிரி: குன்னூர் குடியிருப்பு பகுதியில் இரவில் நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் ஜோடியாக உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.</p><p>நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கடும் உறைப்பனி காரணமாக புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் காய்ந்து கருகின. மேலும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.</p><p>இந்த நிலையில் குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடு இரவில் ஜோடியாக இரண்டு சிறுத்தைகள் உலா வந்தன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் இதே போன்று கோத்தகிரியில் ஜான்ஸ் கொயர் பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் காவலராக பணிபுரியும் ஜானக் என்பவரின் மகன் பகதூர் டீக். இவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.</p><p>அப்போது நெட்வொர்க் சிக்னல் சரியாக கிடைக்காததால் டீக் பகதூர் வீட்டில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது. அந்த சமயத்தில் பகதூர் டீக் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்ட முயன்ற போது போது சிறுத்தை பகதூரை தாக்கியது. மேலும் மாவட்டத்தில் உலா வரும் சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். </p>
