<p>தேனி: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த தவெக கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் பேசினார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாரே சென்று கொண்டிருந்தனர்.</p><p>இந்த நிலையில் தொடர்ந்து த.வெ.க தலைவர் விஜய் குறித்தும், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி குறித்தும் துரைமுருகன் மேடையில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் அப்பகுதிக்கு கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரின் பேச்சுக்கு இடையூறு செய்யும் வகையில் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் வந்த காரை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.</p><p>இதைத்தொடர்ந்து அங்குவந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த நபர்கள் குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p>
