<p>சிவகங்கை: மானாமதுரை ரயில் நிலையத்தில் விபத்து தொடர்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் விபத்து நேரிட்டால் மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, ஒரு ஏசி பெட்டி மற்றும் ஒரு பொதுப் பெட்டி என இரண்டு ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டு விபத்து ஏற்பட்டது போல அமைக்கப்பட்டது.</p><p>இதனைத் தொடர்ந்து, ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனடியாக தளவாடப் பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துகள், கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு உபகரணங்கள் ஆகியவை ரயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டன. </p><p>பேரிடர் மீட்பு படையினரின் 50-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி அளிப்பது மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புவது போன்ற செயல்முறைகளை நடித்துக் காட்டினர். ரயில் விபத்து நேரங்களில் துரிதமாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஆனால், இதனை உண்மை என நினைத்து அப்போது அங்கிருந்த பயணிகள் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர். </p>
