<p>தஞ்சாவூர்: திருமணம் முடிந்த கையோடு மாணவி ஒருவர் வந்து மணக்கோலத்தில் பி.எட் தேர்வு எழுதினார். </p><p>பி.எட் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு தற்போது பருவத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் பி.எட் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள்.</p><p>குந்தவை நாச்சியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவியும் நேற்று தேர்வு எழுதினார். இவருக்கு கருணாகரன் என்பவருடன் காலையில் தான் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த கையோடு மாணவி மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதினார். </p><p>இதே போல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் பகுதியை சேர்ந்த சத்யகீதா என்ற மாணவிக்கும் நேற்று தான் அய்யப்பன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவரும் திருமணம் முடிந்த கையோடு தேர்வு மையத்துக்கு வந்து பி.எட் பருவத் தேர்வினை எழுதினார். </p><p>இவர் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுத வந்தாலும் கல்வி நிறுவனத்தின் சீருடையுடன் வந்து தேர்வு எழுதினார். </p>
