<p>சென்னை: தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கி வரும் நிலையில், இன்று காலை பெண்கள் வங்கி கணக்கில் ரூபாய் 5,000 வரவு வைக்கப்பட்டது அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. </p><p>தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூபாய் 3,000 மற்றும் கோடைக்கால தொகுப்பாக ரூபாய் 2,000 என மொத்தம் ரூ.5000 மகளிர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து மகளிர் உரிமைத்தொகை இன்று காலை வங்கி கணக்கில் வரவு வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் கூறுகின்றனர். </p><p>மேலும் முதலமைச்சரின் இந்த செயலை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். ரூபாய் 5000 வங்கி கணக்கில் வரவு பெற்ற பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். </p>
