<p>சிவகங்கை: தற்போது மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பது, ஆளுங்கட்சிக்கு வாக்குகளாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், தேவையற்ற திட்டங்களை குறைத்துவிட்டு மக்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார். </p><p>சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டார். </p><p>பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவது இயல்பானதே. ஆனால், கூட்டணிக்குள் ஆலோசித்து விட்டுக் கொடுத்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்" என்றார்.</p><p>மேலும், "மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 வழங்கியதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், குறிப்பாக மத்திய அரசின் சில திட்டங்களின் பெயர்களும் அமலாக்க முறைகளும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெளிவாக இல்லை.</p><p>தேவையற்ற திட்டங்களை நிறுத்தி அல்லது குறைத்து, மக்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.5,000 வழங்க மாநில அரசு முயற்சி செய்ய வேண்டும். இது நல்ல பொருளாதார உத்தியாக அமையும்" என்றார். </p>
