<p>காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு பிரியாணி மற்றும் பல்வேறு அறுசுவை உணவு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர். </p><p>காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாநகர பகுதியில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் ஓரிக்கை, பேருந்து நிலையம், பெரியார் தூண், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு தீபாராதனைகள் செய்யப்பட்டன. மேலும் அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்களுக்கு சுட சுட இடியாப்பம், குருமா, இட்லி போன்றவை அன்னதானமாக வழங்கப்பட்டன. </p><p>இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில் சுட சுட சிக்கன் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. பணிக்கு செல்லும் பொதுமக்களும், கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் என ஏராளமானோர் காலை உணவை அருந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில்அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். </p>
