<p>தஞ்சாவூர்: 12 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் அத்திவரதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.</p><p>கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் சன்னதிக்கு கிழக்கே உள்ள பாதாள அறையில் இருந்த நூற்றாண்டுகள் பழமையான அத்திவரதரை, 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றிரவு பொதுமக்கள் தரிசனத்திற்காக மீண்டும் வெளியே எடுத்து கொண்டு வந்துள்ளனர்.</p><p>ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில், மிகவும் பழமையான ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் சிலை பாதாள அறையில் வைத்து, பாதுகாக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அத்திவரதர், 1915-ல் காட்சி கொடுத்த பின்பு பாதாள அறையில் வைக்கப்பட்டார். பல்வேறு காரணத்தால், 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ல் அருள்பாலித்தார். மீண்டும் பாதாள அறைக்கு சென்ற அத்திவரதரை, இன்று முதல் மார்ச் 10 வரை பத்து நாட்களுக்கு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவரை வழிபடுவது மிகவும் விசேஷம் என கூறப்படுகிறது இந்தப் பத்து நாட்களிலும் அத்தி வரதரை சுமார் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், இன்று அதிகாலையிலேயே கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்கக் குவிந்தனர். இதனால், பக்தர்களை வரிசையில் நிறுத்தி வைக்காமல் தொடர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு 600 முதல் 700 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p><p>மேலும், கோயில் நிர்வாகம் அத்திவரதருக்கு தைலக்காப்பு சாற்ற ரூ.300-ம், புஷ்ப சேவை கட்டணமாக ரூ.100-ம் வசூலித்து வருகிறது. தைலக்காப்பு சாற்ற அடையாள அட்டை பெற்றவர்கள் முதல் வரிசையில் சாமியின் பாதத்தில் எண்ணையை தொட்டு வைப்பதால், பின் வரிசையில் பொதுதரிசனத்திற்காக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.</p>
