<p>காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் இரவு உற்சவத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். </p><p>சக்தி பீட தலங்கள் ஒட்டியாண பீடமாக விளங்கும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பிரம்மோற்சவ உற்சவத்தை ஒட்டி 10-ம் நாள் இரவு நடைபெற்ற உற்சவத்தில், நீலம் நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, குங்குமப்பூ, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள் சூடி, லட்சுமி, சரஸ்வதி, தேவியர்களுடன் காஞ்சி காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.</p><p>பின்னர் மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடி வர, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன் வலம் வந்தார். வெள்ளி தேர் உற்சவத்தை ஒட்டி அதிர் வேட்டுக்கள் வெடிக்க வண்ண வண்ண சிறப்பு வாண வேடிக்கையும் நடைபெற்றது. வெள்ளித் தேரில் ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழியெங்கும் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.</p>
