<p>தேனி: பட்டப்பகலில் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் காய்கறி மார்க்கெட் அருகில் வசித்து வருபவர் செல்வராணி(63). இவர் ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது உடல்நிலை குறைவு காரணமாக போடிநாயக்கனூரில் தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரை நண்பர்களும் உறவினர்களும் செல்வராணியை அவ்வப்போது பார்த்துவிட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் செல்வராணி சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து செல்வராணியை சமையலறையில் வைத்து பூட்டிவிட்டு அவரது கழுத்தில் உள்ள நகையை தந்தால் தான் கதவை திறந்து விடுவதாக கூறியதாக கூறப்படுகிறது.</p><p>செல்வராணி நகையை தர மறுத்த நிலையில் அவரை சமையலறையிலேயே பூட்டி வைத்து விட்டு டிவி முன்பு வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.</p><p>இதுகுறித்து போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போடிநாயக்கனூர் டிஎஸ்பி முருகன் தலைமையில் காவல்துறையினர் தடயவியல் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.</p>
