<p>தஞ்சாவூர்: பர்னிச்சர் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சேதமானது.</p><p>கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில் சந்திரசேகர் என்பவர் மொத்தம் மற்றும் சில்லறை வணிகமாக மர சாமான்கள் விற்கும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பர்னிச்சர் கடையின் கிடங்கு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த கும்பகோணம் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீ பரவாமல் அணைத்தனர். எளிதில் தீ பற்றக்கூடிய மரப்பொருட்கள், பஞ்சு மெத்தைகள் உள்ளிட்டவை அதிகம் உள்ளதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மாநகர கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
