<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாகப்பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 2) துவங்கியது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது.</p><p>இதற்காக காலை முதலே நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்து ஆர்வத்துடன் தேர்வுக்கு தயாராகி வந்தனர். அப்போது பள்ளியில் வகுப்பறை செல்லும் படிக்கட்டின் அருகில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்துள்ளது. </p><p>இதனை கண்ட மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் சுரேஷ், நீண்ட நேரம் போராடி நாகப் பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை ஆழியார் அடர் வனப்பகுதியில் அவர் விடுவித்தார். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
