<p>தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடைபெற்றது.</p><p>தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடம் தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுரபி நதியில் நீராடி, சுயம்பு சனீஸ்வரன் கோயிலில் தங்களது சனி தோஷங்கள் நீங்குவதற்காக காக்கை உருவ பொம்மை வைத்து, எள் தீபம் ஏற்றி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.</p><p>இந்நிலையில் இன்று சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சன பரிகார ஹோமம் மற்றும் மகா சாந்தி ஹோமம் நிறைவடைந்து, இன்று அதிகாலை முதலே தொடங்கிய இந்த விழாவில் லட்சார்ச்சனை பூஜை, சனிப் பிரதிகோமம், சனிக்கிரக சாந்தி, விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சனி பகவானுக்கு நடைபெற்ற பூஜைகளைக் கண்டு களித்தனர்.</p><p>இந்து சமய அறநிலையத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்தும் தடுப்பு வேலிகள் அமைத்தும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p>
