<p>தூத்துக்குடி: 78 வயது முதியவர் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆற்றில் மிதந்தபடி 'ஜல யோகா' செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p>தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவரது பணி ஓய்வுக்குப் பின் சிலம்பம் மற்றும் யோகா கலைகளை முற்றிலும் இலவசமாக பயிற்றுவித்து வருகிறார். அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் சென்றபடி சிலம்பம் சுற்றுவது, ஆற்று நீரில் நீண்ட நேரம் மிதந்து யோகா செய்வது எனப் பல்வேறு சாகசங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது இவரது வழக்கம். </p><p>இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நூறு சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தாமிரபரணி ஆற்றில் ’ஜல யோகா’ செய்தார். தண்ணீரின் மேற்பரப்பில் நீண்ட நேரம் மிதந்தபடி அவர் 'ஜல யோகா' செய்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது 78 வயதிலும் ஆற்றுத் தண்ணீரில் மிதந்தபடி முதியவர் யோகா செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>
